வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் பெற்றுக்கொண்ட மொத்தம் 2.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
பிஜீங்கில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன நிதியமைச்சர் லியு குன் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகள் உலக நாடுகளிடம் பெற்றுக்கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கும் சீனாவின் அறிவிப்பு சிக்கல்களுக்கான தற்காலிகத் தீா்வாகக் கருதப்படுகிறது.
சீனாவின் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்பு நிறுவனம் (China International Development Cooperation Agency) மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி [the Export-Import Bank of China] உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் 23 நாடுகளுக்கான கடன்களை மீளச் செலுத்தும் கால எல்லையை நீடித்துள்ளன.
மேலும் சீனா அபிவிருத்திய வங்கி ஊடாக இவ்வாண்டு செப்டம்பர் இறுதிக்குள் வளரும் நாடுகளுக்கு 748 மில்லியன் டொலர் கடன் உதவிகளை வழங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சீன நிதியமைச்சர் லியு குன் கூறினார்.
வளர்ந்துவரும் நாடுகளுக்கான நிதி உதவியை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும். ஏழை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் லியு கூறினார்.